சாலை விபத்தில் கானா பாடகர் சுடரொளி உயிரிழப்பு
சென்னை பரங்கிமலை அருகே நடந்த சாலை விபத்தில், ஆம்னி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி கானா பாடகர் சுடரொளி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையை அடுத்த பம்மல் மூவேந்தர் நகரை சேர்ந்தவர் சுடரொளி. பிரபல கானா பாடகரான இவர் பல்வேறு கானா பாடல்களை பாடியுள்ளார். இவர் தனது நண்பர்களுடன் நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கானா பாடல்களை பாடிவிட்டு பின்னர் பம்மலில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து பம்மலுக்கு புறப்பட்ட சுடரொளி, பரங்கிமலை சிமெண்ட் ரோடு சிக்னல் அருகே வந்த கொண்டிருந்தார். அப்போது அருகே பக்கவாட்டில் வந்துகொண்டிருந்த கார் மீது சுடரொளி வந்த இருசக்கர வாகனம் உரசியதாக கூறப்படுகிறது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்கியது. பேருந்து சக்கரத்தில் விழுந்ததில் கானா பாடகர் சுடரொளி பலத்த காயமடைந்தார். அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த அவரது நண்பர்கள் விபத்தில் படுகாயமடைந்த சுடரொளியை மீட்டு உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சுடரொளி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்து சம்பவம் குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கானா பாடகர் சுடரொலி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.