மரம் வளர்த்து பராமரித்தால், கலைஞர் பிறந்தநாளில் தங்க நாணயம் பரிசு.. - அமைச்சர் சேகர்பாபு தகவல்..
இந்த ஆண்டு மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரித்து வருபவர்களுக்கு , அடுத்த ஆண்டு கலைஞர் பிறந்தநாளில் தங்க நாணயம் பரிசளிப்பதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி நடப்பாண்டு கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கலைஞர் பிறந்தநாள் விழாவின் தொடர்ச்சியாக சென்னை அண்ணா நகரில் கிழக்கு மாவட்ட சுற்றுச் சூழல் அணி சார்பில் 9,999 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரித்து அடுத்த ஆண்டு கலைஞர் பிறந்தநாளில் தங்க நாணயம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது, “தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணிக்கு முதல்வர் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.இதனால்,கலைஞர் பிறந்த நாளில் மரக்கன்றுகளை நட்டு, அதனை நன்றாக பரமாரித்து வருபவர்களுக்கு குழுவை வைத்து தேர்வு செய்து அடுத்த ஆண்டு இதே நாளில் பரிசு வழங்கப்படும்.மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு இவை வழங்கப்படும்” என்று தெரிவித்தார். மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்பு பொதுமக்களிடயே வரவேற்பை பெற்றுள்ளது.