தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வலியுறுத்திய விவகாரம் - ஆளுநர் மாளிகை விளக்கம்

 
rn ravi

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வலியுறுத்திப் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. 

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி நமது நாட்டை "பாரதம்" என்ற கண்ணோட்டத்தில், "ஒரே குடும்பமாக" பார்க்கிறார். ஆனால் இந்த யதார்த்தம் காலனித்துவ காலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட புகைமூட்டத்தால் மறைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்பவே தமிழகத்தில் "நாங்கள் திராவிடர்கள்" என்ற பிற்போக்கு அரசியல் இருந்து வருகிறது. அதனுடன் நமக்கு எந்தத் தொடர்பும் இல்லை. நாம் அரசியலமைப்பால் ஒன்றிணைக்கப்பட்டு அதன் அடிப்படையில் மட்டுமே செயலாற்றுகிறோம். ஆனால் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் 'நாங்கள் ஒருங்கிணைந்த தேசத்தின் அங்கம் இல்லை' என்று வலுவான ஒரு கதையை சொல்லி வருகிறார்கள். 

அதனாலேயே நாடு முழுவதற்கும் பொருந்தக்கூடிய அனைத்தையும், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் 'இல்லை, எங்களுக்கு வேண்டாம்' என்று சொல்லும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாக நாம் அனைவரும் ஒன்று. பாரதத்தின் ஒரு பகுதி தமிழ்நாடு. அதற்கேற்ப தமிழகம் என்று நாம் அழைப்பதே மிகவும் பொருத்தமானது. காரணம், இந்த நிலம் பாரதத்தின் ஆன்மாவை, பாரதத்தின் அடையாளத்தை பராமரிக்கிறது. வெளிநாட்டினர் ஏற்படுத்திய பல அழிவுகளையும் மீறி பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணில் ஒற்றுமை பராமரிக்கப்பட்டு வருகிறது. முழு பாரதத்தையும் நிலைநிறுத்தி அதற்குப் புத்துயிர் தருவது இந்த நம்பிக்கை தான் ; இப்போது இதை சிலர் பொய்யாக்க முயற்சிப்பதை ஏற்க முடியாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.