கனல் கண்ணனை போலீசார் கைது செய்யக்கூடாது - ஹெச்.ராஜா வலியுறுத்தல்

 
h

பெரியார் குறித்து கனல் கண்ணன் பேசியதில் தவறில்லை எனவும், அந்த கருத்திற்காக அவரை போலீசார் கைது செய்ய கூடாது எனவும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: கனல் கண்ணன், கோவில் முன்பு உள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறியது தவறில்லை. இதற்கு முன் சோ.ராமசாமி கூட பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என பேசியுள்ளார். ஒருசிலரின் தூண்டுதலுக்காக காவல்துறை ஆளுங்கட்சியின் கைக்கூலியாக செயல்படக் கூடாது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில், தகராறு செய்தவர்கள் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். யாரையும் ஜாதி பார்த்து கைது செய்யவில்லை. 

தமிழக ஆளுநரை ரஜினி சந்தித்தது தவறு இல்லை. மரியாதை நிமித்தமாக சந்தித்திருக்கலாம். ரஜினி அரசியல் சம்பந்தமாக உரையாடினோம் என்பதிலும் தவறில்லை. அரசு, அரசியல் எல்லாம் ஒன்று தான். மதுரையில் அதிகமாக புழங்கிய போலி பாஸ்போர்ட் குறித்து கூட ரஜினி பேசி இருக்கலாம். பாடப்புத்தகத்தில் இருந்த பல நல்ல விஷயங்களை கல்வித்துறையினர் அகற்றி விட்டனர். இதனால், மாணவர்களுக்கு நல்ல விஷயங்கள் சென்றடையவில்லை. அரசு போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையாக, முதலில் மதுக் கடைகளைத் தான் மூட வேண்டும். இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.