"கோயில் நில ஆக்கிரமிப்புகளை மீட்டு வேலி போடுங்க" - அறநிலைய துறை உத்தரவு!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில், ஆணையர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இணை ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கோயில்களின் வருவாய் இனங்கள் மூலம் இதுவரை ரூ.71 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், நிலுவைத் தொகையை உடனடியாக வசூல் செய்து, கோயில்களின் வருவாயைப் பெருக்க வேண்டுமென ஆலோசனைக் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கோயில்களில் தொடர்ந்து 5 ஆண்டுகள் தற்காலிகமாகப் பணிபுரியும் 1,500 பணியாளர்களை பணிவரன்முறை செய்வது தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும். கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு, கோயில் வசம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மீட்கப்பட்ட இடங்களைச் சுற்றி வேலி அமைத்து, பாதுகாக்க வேண்டும்.
திருப்பணிகள் நடைபெறும் 750 கோயில்களில் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் இணை ஆணையர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. மேலும், கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன” என்றார்.