#BREAKING : சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று அரை நாள் விடுமுறை!!
தொடர் மழையின் காரணமாக இன்று சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயலின் தாக்கம் காரணமாக சென்னை உள்ளிட்ட பல முக்கிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சென்னையில் அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காலையில் மிதமான மழை பெய்து வந்த நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில்கனமழை தொடர்வதால் சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.