காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை
மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் அரை நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மாண்டஸ் புயல் கரையை கடந்த பின்னரும் கூட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் காலை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். விடுமுறை அளிக்கப்படும் என மாணவர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்த நிலையில், விடுமுறை அளிக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் மழையில் குடை பிடித்தவாறு பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர். இதனிடையே மழையின் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.