தமிழகத்தில் XE தொற்று பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
Ma Subramanian

 தமிழகத்தில் எக்ஸ்-இ தொற்று பாதிப்பு இல்லை என்றும், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார தினத்தையொட்டி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், உணர்திறன் ஒருங்கிணைப்பு பூங்காவிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டினர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், ரூ.364.22 கோடி மதிப்பீட்டில் 1583 படுக்கைகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 14ம் தேதி திறந்து வைக்க உள்ளார். 

Ma Subramanian

நேற்று மும்பையில் ஒருவருக்கு  எக்ஸ்-இ வகை தொற்று என்று கூறப்பட்ட நிலையில், அவருக்கு அந்த வகை தொற்று இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் புதிய வகை தொற்று எதுவும் இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளோம். அதேபோல் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை சில மாவட்டங்களில் கணிசமாக அதிகரித்து வரும் சூழ்நிலையில், இதனை கண்காணிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுதப்பட்டுள்ளது.  குறிப்பாக திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. தொற்று உறுதி செய்யப்படும் மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.