ஒரே வார்டில் கவுன்சிலர் பதவிக்கு களமிறங்கிய தம்பதி - பெரம்பலூரில் சுவாரஸ்யம்!!
ஒரே வார்டில் கவுன்சிலராக பதவிக்கு போட்டியிடும் கணவன் -மனைவி போட்டியிடும் சுவாரஸ்யம் பெரம்பலூரில் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி, மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சிக்கு உட்பட்ட 12,838 வார்டு உறுப்பினர் பதவிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு வேட்பு மனு தாக்கல் நிறைவடையும் நிலையில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குதேர்தல் நடைபெறுகிறது. அத்துடன் வாக்கு எண்ணிக்கையானது 22ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சியின் 20-வது வார்டில் சுரேஷ் மற்றும் அவரது மனைவி இளமதியும் தேர்தலில் போட்டியிட களமிறங்கியுள்ளனர். ஒரே வார்டில் கணவன், மனைவி இருவருமே கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடுவதற்கு மனுதாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து கூறியுள்ள அவர்கள், இந்த தேர்தல் சட்டமன்ற தேர்தல் இல்லை. எங்களுடைய வார்டு பகுதிக்கான தேர்தல். எங்களுக்கு தான் எங்கள் வார்டில் உள்ள பிரச்னை தெரியும். மற்றவர்களுக்கு எப்படி தெரியும்? கட்சி, சின்னம் இதெல்லாம் பார்த்து ஓட்டு போட்டால், கடைசியில் டாட்டா தான் காட்டுவார்கள். அதனால் தான் நாங்கள் துணிந்து நிற்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.