மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.10 லட்சம் கன அடியாக அதிகரிப்பு..
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1 லட்சத்து 10 ஆயிரக் கன அடியாக அதிகரித்துள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆனைகள் நிரம்பியதால் அதிலிருந்து வெளியேற்றப்படும் நீரும் வருவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன் தினம் 50,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணை முழுக்கொள்ளளவை எட்டியதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அணையின் பாதுகாப்பு கருதி அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 60,000 கன அடியாகவும், மாலையில் வினாடிக்கு 80,000 கன அடியாகவும் அதிகரித்தது.
பின்னர் நள்ளிரவில் வினாடிக்கு 1 லட்சம் கன அடியாக மேலும் அதிகரித்தது. இந்நிலையில் தற்போது அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் மேட்டூ அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அனைக்கு வரும் 1.10 லட்சம் கன அடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக நீர் மின் நிலையங்கள் வழியாக 23,000 கன அடி தண்ணீரும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 87, 000 கன அடி தண்ணீரும் என மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட இருக்கிறது. ஆகையால் காவிரி ருகரைகளையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை சார்பில் , கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகள் வசிக்கும் மக்கள் மேடான மற்ரும் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் செல்லும் கீழ் மாவட்டங்களானசேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.