ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை - உரிய நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் உத்தரவு!!
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை அமைச்சரவைக்கூட்டத்தில் வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (27.08.2022) தலைமைச் செயலகத்தில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. ஏ.ஆறுமுகசாமி அவர்கள் சந்தித்து விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வழங்கினார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் கடந்த 5.12.2016 அன்று காலமானது குறித்து விசாரிப்பதற்காக கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 25.09.2017 அன்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. ஏ. ஆறுமுகசாமி அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இவ்விசாரணை ஆணையத்தின் கால வரம்பு 24.08.2022 அன்று முடிவுற்ற நிலையில், இன்று (27.08.2022) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. ஏ. ஆறுமுகசாமி அவர்கள் விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வழங்கினார்.இந்த அறிக்கையை 29.08.2022 அன்று நடைபெற இருக்கின்ற அமைச்சரவைக் கூட்டத்தில் (Cabinet Meeting) ஒரு பொருண்மையாக வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு சட்டத்துறை திரு. எஸ்.இரகுபதி மற்றும் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்" என்று குறிப்பிட்டுள்ளது.