இலங்கை வன்முறையால் தமிழ்நாட்டுக்கு ஆபத்தா? - மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!!
இலங்கையில் வன்முறை தொடர்வதால் தமிழ்நாட்டுக்குள் தேச விரோத சக்திகள் உருவாக வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக அங்கு வன்முறை வெடித்துள்ளது. தலைநகர் கொழும்புவில் மகிந்த ராஜபக்சேவின் இல்லம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இலங்கையில் ஆளும் கட்சியினர் மீது எதிர்கட்சி மற்றும் பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே வடரெக்க சிறைச்சாலையின் புனர்வாழ்வு முகாமிற்கு கைதிகளை ஏற்றி சென்ற பேருந்து மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 சிறைச்சாலை அதிகாரிகள், 10 கைதிகள் காயமடைந்தனர். அத்துடன் பேருந்தில் பயணம் செய்த 58 கைதிகள் தப்பி ஓடியதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தேச விரோத சக்திகள் ஊடுருவலை தடுக்க கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்த தமிழககாவல்துறை , பாதுகாப்பு குழுமத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.தமிழக கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும், இலங்கையில் இருந்து தப்பிய 58 கைதிகள் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பு உள்ளது , விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், போதைப்பொருள் கும்பல் கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது. இதனால் இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.