கரும்பை 10 நாட்களுக்கு முன்பே கொடுத்தால் சாப்பிட நன்றாக இருக்குமா?? - திருமா கேள்வி..
பொங்கல் கரும்பை 10 நாட்களுக்கு முன்பு கொடுத்தால் நன்றாக இருக்குமா என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வியெழுப்பியுள்ளார்.
கடந்த 2021ல் அதிமுக ஆட்சியின் போது பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2500 ரொக்கம் வழங்கப்பட்டது. ஆனால் 2022 திமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, வெல்லம், நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன. பொங்கல் பரிசில் ரொக்கப்பணம் இடம்பெறவில்லை. மேலும் பொங்கலுக்கு வழங்கப்பட்ட பொருட்களின் தரம் குறித்த விமர்சனங்களும் எழுந்தன.
இதனையடுத்து இந்த ஆண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேநேரம் பொங்கல் பரிசில் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறவில்லை. அறிவிக்கப்பட்ட ரொக்கப்பணமும் குறைவாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 5000 ரூபாய் பொங்கல் பரிசாக கொடுக்க வேண்டும் என்றும், கரும்பு கொடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “ தமிழக அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். கரும்பை பொங்கல் பண்டிகை அன்று வழங்கினால் தான் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். 10 நாட்களுக்கு முன்பே வழங்கினால் நன்றாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.