கனியாமூர் பள்ளி விரைவில் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு என தகவல்

 
kallakurichi

கள்ளக்குறிச்சி கலவரத்தில் சேதமடைந்த கனியாமூர் தனியார் பள்ளி இன்னும் சில தினங்களுக்குள் முழுமையாக இயங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி  ஸ்ரீமதி என்ற மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஜூலை 17ஆம் தேதி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.  கலவரத்தில், கனியாமூர் பள்ளி முழுவதுமாக சேதமடைந்துள்ள நிலையில், ஜூலை மாதம் 13ம் தேதி முதல் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் கனியாமூர் தனியார் பள்ளி உள்ளது. இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரை 360 பேர்  இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கலவரத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது நடவடிக்கையை அதிரடியாக மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்ததாக கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

srimathi

இறந்த மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 5 பேருக்கும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பள்ளி  தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 26-ம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஸ்ரீமதியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

இந்த பள்ளியில் ஒன்பதாவது முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தற்போது மாற்று இடத்தில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளியின் தாளாளர், செயலாளர் மற்றும் ஆசிரியர்கள் ஐந்து பேரும் மாலையில் சேலம் மத்திய சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையாக வாய்ப்புகள் உள்ளது. கோர்ட்டு உத்தரவுப்படி தாளாளர், செயலாளர், முதல்வர் மூன்று பேரும் மதுரையிலும், இரண்டு ஆசிரியைகளும் சேலத்திலும் தங்கி, காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். இதற்கிடையே, இன்னும் சில தினங்களில் பள்ளி உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், தொடர்ந்து, விரைவாக சீரமைப்புப் பணிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முடிவு பெற்றவுடன் 5 முதல் 8 வகுப்பு வரையிலும், அதன் பிறகு 1 முதல் 4 வகுப்பு வரையிலும் பள்ளி வகுப்புகள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.