ஜெயலலிதா மரணம் : விசாரணை அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்தார் நீதிபதி ஆறுமுகசாமி..

 
ஜெயலலிதா மரணம் : விசாரணை அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்தார் நீதிபதி ஆறுமுகசாமி..


 முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த ஆறுமுகசாமி ஆணையம் தனது அறிக்கையை , தற்போது முதலமைச்சர் மு.க.,ஸ்டாலினிடம் தாக்கல் செய்திருக்கிறது.  

2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி நள்ளிரவில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 70 நாட்களுக்கும் மேல் மருத்துவமனையில் இருந்த அவர் அதே ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார்.  இந்நிலையில் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் புகார் எழுந்ததை அடுத்து, அது தொடர்பாக விசாரிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி   தலைமையில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது.  ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், உறவினர்கள் , சசிகலா உறவினர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் ,போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் என 158 பேரிடம்  ஆணையம் விசரணை மேற்கொண்டது .  ஜெயலலிதா

மூன்று மாதத்திற்குள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில், விசாரணை முழுமை பெறாததால் 14 முறை ஆணையத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது.  முதல் ஆண்டிலேயே  ஆறுமுகசாமி ஆணையத்தின் 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில்,  அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மருத்துவர்கள் வாக்குமூலத்தை தவறாக மொழியாக்கம் செய்து பதிவு செய்வதாக கூறி,   விசாரணைக்கு  தடை வாங்கியது.  இதன் காரணமாக இரண்டு ஆண்டுகள் விசாரணை நடைபெறாமல் இருந்தது.  பின்னர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி  மீண்டும் ஆறுமுகசாமி ஆணையம்  விசாரணையை தொடங்கியது.   
 

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்
பின்னர் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு அமைத்து ஆணையம் தனது விசாரணை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்ட நிலையில் 7 பேர் உள்ளடங்கிய  எய்ம்ஸ் மருத்துவ குழு அமைத்து மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டது. அதன்பிறகு ஓ. பன்னீர்செல்வம், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோரும்  ஆணையத்தில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்தார்.  சசிகலாவை பொறுத்தவரை அவர் சிறையில் இருந்ததால், அவருடைய பதில்கள் அனைத்தையும் தனது வழக்கறிஞர் மூலம்  பிரமானப்பத்திரமாக  தாக்கல் செய்தார்.  இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி  ஆணையம் விசாரணையை முழுமையாக நிறைவு செய்திருக்கிறது.   இன்று காலை 10. 40 மணியளவில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதியரசர் ஆறுமுகசாமி தனது அறிக்கையை  வழங்கினார்.  தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்யப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சுமார் 600 பக்கங்களைக் கொண்டுள்ளது.  

ஜெயலலிதா மரணம்

இந்த அறிக்கையில்   எவ்வாறான அம்சங்கள் இடம்பெற்றுள்ளது  என்பதை அறிந்த பின்னர்,  அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையிலேயே அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறதா? ,  அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எந்த  மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது, எதனால் அவர் வெளிநாடு அழைத்துச் செல்லப்படவில்லை என்பது உள்ளிட்ட பல கேள்விகள் உள்ளன.  அதற்கு தீர்வாக இந்த அறிக்கை முழுமையாக வாசிக்கப்பட்ட பின்னரே,  அடுத்து அரசு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்போகிறது என்பது தெரியவரும்.