பிரதமர் மோடியின் வருகையையொட்டி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் - கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன் அறிவிப்பு
பிரதமர் மோடி வருகிற 26ம் தேதி தமிழகம் வரவுள்ள நிலையில், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை எதிர்த்து வருகிற 26ம் தேதி முதல் 31ம் ட்தேதி வரை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில், சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம். பி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கே.பாலகிருஷ்ணன்,மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை எதிர்த்து, மிகப்பெரிய இயக்கம் நடத்த உள்ளதாகவும், வரும் 25 முதல் 31ம் தேதி வரை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் ஸ் மறியல் உள்ளிட்டவற்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பெட்ரோல், டீசலில் ஒரு சிறிய அளவை குறைத்து உள்ளனர். மத்திய அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 200% வரியை உயர்த்திவிட்டு, அதில் 6% மட்டுமே குறைப்பது சரியாக இருக்காது என்ற அவர் முழுமையாக செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாக கூறினார். அதேபோல் வட மாநிலங்களில் கோதுமை பெரிய பிரச்சனை உள்ளது. தமிழகத்திலும் அதுபோன்று நியாயவிலை கடையில் அரசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், வேலைவாய்ப்பு இல்லாமல், இளைஞர்கள் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது என்றார்.அதுமட்டுமின்றி மத்திய அரசின் தவறுதல் காரணமாக பஞ்சு விலையும் உயர்ந்து உள்ளதாக கூறிய பாலகிருஷ்ணன், ஒரே நாளில் 12 ஆயிரம் அளவிற்கு பருத்தி விலை உயருகிறது என்றும், மத்திய அரசு பருத்தியை சேமிக்காமல், தனியார் நிறுவனங்களுக்கு விற்றுள்ளது தான் காரணம் என்று குற்றஞ்சாட்டினார்.
அதன்பின் பேசிய திருமாவளவன் கூறும்போது,மோடி அரசின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் தேசிய அளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்க உள்ளது என்றார். எனவே மோடி அரசு சமூக பிளவுக்கு காரணமாக இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், 25ம் தேதி துண்டு அறிக்கைகள் வழங்க உள்ளதாகவும், 26, 27 தேதிகளில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும், மீதமுள்ள நாட்களில் பொதுமக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக கூறினார். கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்ட 26 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவது குறிப்பிடத்தக்கது.