பண மதிப்பிழப்பு - பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட கே.எஸ். அழகிரி வலியுறுத்தல்

 
ks alagiri

பிரதமர் மோடி பணமதிப்பிழப்பினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டு மக்களுக்கு தனது நிலையை தெளிவு படுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார். 

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு அறிவிப்பு செய்து நேற்றோடு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. நாட்டு மக்களை கடும் துன்பத்திற்கு ஆளாக்கிய அறிவிப்பு வெளியிட்டு கடந்த ஆறு ஆண்டுகளில் இதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து ஆய்வு செய்தால் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் தான் மிஞ்சுகிறது. பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் 15 லட்சத்து 41 ஆயிரம் கோடியில், ரூபாய் 15 லட்சத்து 31 ஆயிரம் கோடி வங்கிகளுக்கு திரும்பி வந்து விட்டது. ஏறத்தாழ 99.3 சதவிகித மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்து விட்டன.

Ks Azhagiri

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் ரூபாய் மூன்றிலிருந்து நான்கு லட்சம் கோடி மதிப்புள்ள கருப்பு பணம் வங்கிகளுக்கு திரும்ப வராது என்று நம்பிய பிரதமர் மோடிக்கு இது மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. கடந்த ஆறு ஆண்டுகளாக பணமதிப்பிழப்பினால் ஏற்பட்ட விளைவுகளையும், பாதிப்புகளையும் ஆய்வு செய்வது மிகமிக அவசியமாகும். இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சி 2017-18ல் 7 சதவிகிதமாக கடுமையாக சரிந்திருக்கிறது. இதனால் ரூ. 2.2 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியபடி மோடியின் அறிவிப்பு திட்டமிட்ட கொள்ளை என்றும், சட்டப்படியான மோசடி என்றும், இதனால் நாட்டிற்கு பொருளாதார பேரழிவு ஏற்படும் என்று கூறினார். பொருளாதார நிபுணரான அவரது கூற்று இன்று நிரூபிக்கப்பட்டு நடைமுறையில் இந்திய மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இத்தகைய பேரழிவுமிக்க அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி பணமதிப் பிழப்பினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டு மக்களுக்கு தனது நிலையை தெளிவு படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்