காங்கிரஸ் கட்சி இந்து மதத்துக்கு எதிரானது அல்ல - கே.எஸ்.அழகிரி பேச்சு

 
ks alagiri

காங்கிரஸ் கட்சி இந்து மதத்துக்கு எதிரானது அல்ல எனவும், காங்கிரஸ் இந்து மதத்தின் மீது நம்பிக்கை உடைய ஒரு அரசியல் கட்சி எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 71-வது பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில்  காங்கிரசும் மதசார்பின்மையும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.  விழாவில் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, எம்.பி.க்கள் விஜய் வசந்த், விஷ்ணுபிரசாத், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Ks Azhagiri

இந்த கருத்தரங்கில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:- காங்கிரஸ் கட்சி இந்து மதத்துக்கு எதிரானது அல்ல. இந்து மதத்தை குறை கூறுவதும், சிறுமைப்படுத்துவதும் நேருவின் பழக்கம் என்றும் வடமாநிலங்களில் சமீபகாலமாக ஒரு கருத்து வளர்ந்து வருகிறது. ஆனால் அது உண்மையல்ல. காங்கிரஸ் இந்து மதத்தின் மீது நம்பிக்கை உடைய ஒரு அரசியல் கட்சி. நேருவுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவர் ஒரு சீர்திருத்தவாதி. ஆனால் இந்து மதத்துக்கு எதிராக அவர் செயல்பட்டது இல்லை. நான் ஒரு இந்து, ராமனை வழிபடுகிறேன் என்று மகாத்மா காந்தி சொன்னார். ஆனால், அதை அடுத்தவரிடம் திணிக்க மாட்டேன் என்று கூறினார். இதுதான் காங்கிரசின் தத்துவம். இதுதான் மதச்சார்பின்மை.பிரிவினைவாதம் பேசுபவர்கள், மதத்துக்கு எதிராக பேசுபவர்கள், இன உணர்வுகளை கிளப்புபவர்கள் காலப் போக்கில் தோல்வியடைவார்கள். இந்திய அரசியல் சாசனத்தையே மாற்ற வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம். அரசியல் சாசனத்தை காப்பாற்றவும், மதசார்பின்மையை காக்கவும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.