குலசை முத்தாரம்மன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்!!
உலக புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் ஆண்டுதோறும் தசரா திருவிழா நடைபெறுவது வழக்கம். இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேடமிட்டு அம்மனை வந்து தரிசனம் செய்து செல்வார்கள். ஆனால் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டம் முத்தாரம்மன் கோவில் திருவிழா களையிழந்து காணப்பட்டது.
இந்த சூழலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்த நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் கடந்த 26ஆம் தேதி தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் காரணமாக அம்பாள் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தாள்.
இந்நிலையில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது. தசரா விழாவின் 10ஆம் நாளான இன்று நள்ளிரவு 12 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்தெல்லாம் பக்தர்கள்பல்வேறு வேடம் அணிந்து வலம் வருவதால் திருவிழா களைகட்டியுள்ளது.