தமிழகத்தில் 10க்கும் குறைவாகவே கொரோனா பாதிப்பு.. - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..
தமிழத்தில் கடந்த 15 நாட்களாக 10க்கும் குறைவாக ஒற்றை இலக்க எண்களில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 15 நாட்களாக தமிழ்நாட்டில் நாள்தோறும் 4000 முதல் 5000 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும், இதில் 10-க்கும் குறைவாக ஒற்றை இலக்க எண்களில் தான் கொரோனா பாதிப்பு பதிவாகி வருவதாகவும் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் சீனா, தைவான், ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து வருவோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை இன்று முதல் நடத்தப்படுகிறது என்றும், மேலும் முகக்கவசம், தனிமனித இடைவெளி போன்ற விதிமுறைகள் எதுவும் விலக்கப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா மீண்டும் சற்று தலைதூக்கி இருப்பதால் கொரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது எனவும், அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உயிர்காக்கும் மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றும் ஏற்கனவே அமைச்சர் கூறியிருந்த நிலையில், கொரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று தெரிவித்தார்.