காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று உள்ளுர் விடுமுறை அறிவிப்பு..
காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் பகுதியில் அமைந்துள்ளது ஆயிரங்காளியம்மன் கோயில். இந்த அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் எந்த ஒரு பொருளும் ஆயிரம் எண்ணிக்கையில் வைத்துதான் பூஜை செய்ய வேண்டும் என்ற ஐதிகம் கடைபிடிக்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் ஆயிரம்காளியம்மனை பேழையில் இருந்து எடுத்து இரு தினங்களுக்கு பக்தர்கள் வழிபாடு செய்ய சிறப்புன் பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்..
இந்நிலையில், ஆயிரம்காளியம்மன் கோயில் திருவிழா நேற்று அதிகாலை தொடங்கியது. இந்தக் கோயிலில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா இன்று நடைப்பெறுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே ஆயிரங்காளியம்மனை தரிசிக்க முடியும் என்பதால், தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிக்க கோவிலுக்கு வருவர். இதனையொட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று ( ஜூன் 8) ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு இன்று சிறப்பு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 11 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.