தமிழ்நாட்டில் இன்னமும் உள்ளாட்சிகளுக்கு முழு அதிகாரம் அளிக்கப்படவில்லை!!

 
election

தமிழ்நாட்டில் இன்னமும் உள்ளாட்சிகளுக்கு முழு அதிகாரம் அளிக்கப்படவில்லை என்று ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசியல் சட்டத்தின் 12 ஆவது அட்டைவணையில் உள்ள 18 அதிகாரங்களை நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு அளிக்கக் கோரும் 74ஆவது அரசியல் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு 29 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், தமிழ்நாட்டில் இன்னமும் உள்ளாட்சிகளுக்கு முழு அதிகாரம் அளிக்கப்படவில்லை.

pmk

அடுத்த சில நாட்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்து மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்க இருக்கிறார்கள். மக்கள் வாழும் பகுதிகளுக்கு மிக அருகிலேயே நகரசபைகள் அமையப்போகின்றன. ஆனால், நகர அளவிலான பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காணும் அதிகாரம் அந்த அரசுகளுக்கு இருக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை நிலைமை ஆகும்.அதிகாரப்பரவலாக்கம் என்பது ஒவ்வொரு நிலையிலும் உறுதுணையாக இயங்கும் ‘துணையமைப்புக் கொள்கை (Principle of Subsidiarity)’ அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசாங்கத்தின் பெரும்பாலான சேவைகள் மக்களுக்கு அருகிலேயே உள்ளூர் அளவில் நிருவகிக்கப்பட வேண்டும்.வீடுகளில் குடும்பங்கள் தங்கள் அளவில் செய்துகொள்ள முடியாத சேவைகளைச் சமுதாயம் அளிக்க வேண்டியிருக்கிறது. ஒரு மட்டத்திலும் நிறைவு செய்ய முடியாத பணிகளை மட்டுமே அதற்கு மேலுள்ள மட்டத்தில் மேற்கொள்ள வேண்டும். உள்ளூர் அரசுகளால் மேற்கொள்ளமுடியாத பணிகளை மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் மேற்கொள்ளமுடியாத பணிகளை மாநில அளவிலும், மாநில அளவில் மேற்கொள்ளமுடியாத பணிகளைத் தேசிய அளவிலும் மேற்கொள்ள வேண்டும்.

இந்திய அரசியல் சட்டத்தின் 73 ஆவது திருத்தம் ஊரக உள்ளாட்சிகளுக்கும், 74 ஆவது திருத்தம் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் அதற்கான வாய்ப்பினை வழங்கியுள்ளது. இதற்கான ஆணையுரிமைகளை வழங்கும் அதிகாரம் மாநிலச் சட்டமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலமும், அரசியல் சட்டத்தில் கூறப்பட்ட அதிகாரங்களை முழு அளவாக உள்ளாட்சிகளுக்குப் பகிர்ந்தளிக்கவில்லை.

election

தமிழ்நாட்டில் உள்ளாட்சி நகரசபை அரசுகள் மேற்கொள்ள வேண்டிய ஏராளமான பணிகளை மாநில அரசும், அதிகாரிகள் கோலோச்சும் அமைப்புகளும் செய்துகொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, சென்னை பெருநகராட்சியின் மூலமாகச் செய்ய வேண்டிய பல பணிகளை சிஎம்டிஏ நிறுவனம் செய்துகொண்டிருக்கிறது. பெருநகரத் திட்டக்குழு (Metropolitan Planning Committee - MPC) எனும் அமைப்பின் மூலம் மக்கள் பங்கேற்புடன் தயாரிக்க வேண்டிய சென்னை நகருக்கான முழுமைத் திட்டத்தை (Chennai Metropolitan Masterplan) மாநில அரசே அதிகாரிகள் மூலம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைப் பறித்து வைத்துள்ளது மாநில அரசு. உள்ளாட்சிகளின் பல அதிகாரங்கள் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாததற்கும், அடிப்படை சேவைகளுக்காக மக்கள் அலைக்கழிக்கப்படுவதற்கும் இதுவும் ஒரு காரணமாகும்.

தமிழ்நாட்டில் அதிகாரப்பரவலாக்கத்தை இனிமேலும் தள்ளிப்போடக் கூடாது. இந்தியப் பேரரசிடம் மாநில உரிமைக்காகக் குரல் கொடுக்கும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டின் உள்ளாட்சிகளுக்கான அதிகாரங்களை உடனடியாகப் பகிர்ந்தளிக்க வேண்டும். அரசியல் சாசனத்தின் 74 ஆம் திருத்தத்தின் கீழான 18 அதிகாரங்களையும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு முழுமையாக அளிக்க வேண்டும்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்தபின், அடுத்து வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தமிழ்நாட்டில் இதற்கான சட்டத்தை கொண்டுவர வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.