காரைக்காலில் இன்று உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..
கைலாசநாதர் கோயில் தேரோட்ட விழாவை முன்னிட்டு காரைக்காலில் இன்று (17-03-2022) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் சுந்தராம்பாள் மற்றும் கைலாசநாதர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் 12 நாட்களுக்கு கைலாசநாதர் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்தவகையில் இந்த ஆண்டு கைலாசநாதர் பிரமோற்சவ விழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் பாரம்பரிய முறைப்படி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் கைலாசநாதர், சுந்தராம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெள்ளி ரிஷபத்தில் சகோபுர வீதியுலா கடந்த 13ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் ( மார்ச் 17) திருத் தேரோட்டமும் நடைபெற இருக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வர்கள் என்பதால், இன்று காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் கைலாசநாதர் கோவில் தேரோட்ட திருவிழாவை தொடர்ந்து வருகிற 20ஆம் தேதி தெப்ப உற்சவமும், 23ஆம் தேதி காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழாவும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.