தமிழகத்தில் நேற்று நடந்த தேசிய லோக் அதாலத்தில் 79,599 வழக்குகளுக்கு தீர்வு

 
lok adalat

தமிழகம் முழுவதும் நேற்று நடந்த தேசிய லோக் அதாலத்தில் 334 கோடி ரூபாய் மதிப்பிலான 79,599 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் சமாதானநிலை மற்றும் சமரசம் மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்டதாகும். தமிழகம் முழுவதும் நேற்று தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நான்கு அமர்வுகளும், மதுரைக் கிளையில் நான்கு அமர்வுகளும், மாவட்ட மற்றும் தாலுகா அளவுகளில் என மாநிலம் முழுவதும் மொத்தம் 419  அமர்வுகளும் வழக்குகளை தீர்வுக்கு எடுத்துக் கொண்டன.
இதில், 334 கோடியே 91 லட்சத்து 11 ஆயிரத்து 545 ரூபாய் மதிப்பிலான 79 ஆயிரத்து 599 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன. இதில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 63 ஆயிரத்து 348 வழக்குகளும், நீதிமன்ற விசாரணைக்கு வராத 12 ஆயிரத்து 251 வழக்குகளும் அடங்கும்.

court

இதில், 2 ஆயிரத்து 4 செக் மோசடி வழக்குகளில் இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 49 கோடியே 97 லட்சத்து 23 ஆயிரத்து 381 ரூபாய் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 157 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் 144 கோடியே 85 லட்சத்து 25 ஆயிரத்து 246 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், 7 ஆயிரத்து 301 சிவில் வழக்குகளில் 33 கோடியே 60 லட்சத்து 32 ஆயிரத்து 130 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

court

மேலும், 106 குடும்ப நல வழக்குகள் இந்த லோக் அதாலத்தில் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், தொழிலாளர் பிரச்னை தொடர்பான 20 வழக்குகளில் 71 லட்சத்து 50 ஆயிரத்து 900 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலாளர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.