ரூ.2.88 கோடி மதிப்பீட்டில் பெரியார் நினைவு சமத்துவபுரம் - அசத்தும் தமிழக அரசு!!

 
tn

 விழுப்புரம் மாவட்டம், கொழுவாரியில், ரூ.2.88 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கொழுவாரி ஊராட்சியில் 2 கோடியே 88 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தினை திறந்து வைத்து, சமத்துவபுர வளாகத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலையினையும் திறந்து வைத்தார். அனைத்து மக்களும் சாதி, மத பேதமின்றி சமமாக வாழ்ந்திட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பெயரில் மாண்புமிகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட உன்னதத் திட்டம் தான் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டமாகும்.

tn

மாண்புமிகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் விழுப்புரம் மாவட்டத்தில் நான்கு சமத்துவபுரங்கள் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. ஐந்தாவது சமத்துவபுரமாக 2010-2011ஆம் நிதியாண்டில் கொழுவாரி ஊராட்சியில் சமத்துவபுரம் கட்டப்பட்டு திறக்கும் நிலையில் ஆட்சி மாற்றத்தால் திறக்கப்படாமல் இருந்தது. இந்த சமத்துவபுரம் கொழுவாரி கிராமத்தில் 7.00 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

இச்சமத்துவபுரத்தில் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒரு வீட்டின் பரப்பளவு 249 சதுர அடி, தலா ஒரு வீட்டின் மதிப்பு 1.92 இலட்சம் என மொத்தம் 100 வீடுகள் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. சமத்துவபுரத்தின் முகப்பில் தந்தை பெரியாரின் மார்பளவு திருவுருவச்சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பாக ரு.14.20 இலட்சம் மதிப்பீட்டில் 100 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பும், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் இதர குடிநீர் திட்டப் பணிகள் ரூ.7.59 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

tn

சிறுவர், சிறுமியர் விளையாடும் வகையில் ரூ.7.32 இலட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா, கைப்பந்து, மற்றும் கபடி மைதானம் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கலைஞர் விளையாட்டுத்திடல் மற்றும் கலைஞர் விளையாட்டுப் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தெருக்களில் ரூ.3.42 மதிப்பீட்டில் மின்விளக்குகள், ரூ.7.64 இலட்சம் மதிப்பீட்டில் அனைத்து தெருக்களிலும் மழைநீர் வடிகால் வசதிகள், அனைத்து தெருக்களிலும் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் அவ்வளாகத்தில் ரூ.2.75 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடை கட்டடத்தை திறந்து வைத்து, ரூ.10.19 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அங்கன்வாடி மையக் கட்டடம் மற்றும் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நூலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.