அகிலேஷ் யாதவுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

 
akilesh

சமாஜ்வாடி கட்சி தலைவரும் உத்தரபிரதேச மாநில எதிர்க்கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவருமான முலாயம் சிங் யாதவின் மகன் ஆவார். இவர் 1973ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் எடாவா பகுதியில் பிறந்தார். இவர் முதன் முதலாக 2000 ஆம் ஆண்டு கன்னவஜ் மக்களவை தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து 2004ம் ஆண்டும் 2009ம் ஆண்டும் தொடர்ந்து மூன்று முறை இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவரின் தனித்திறமையான அரசியல் பரப்புரையால் 2012ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 224 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து அகிலேஷ் யாதவ் தனது 38வது வயதில் முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில் தற்போது நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை பிடிக்காவிட்டாலும், பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இவருக்கு அதிதி யாதவ், டீனா யாதவ், அருச்சுனன் யாதவ் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் அகிலேஷ் யாதவ் தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

akilesh

இதேபோல் அகிலேஷ் யாதவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் சமூக வலைதளங்களில்  வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், உத்தரபிரதேச மாநிலத்தின் துணிச்சல்மிகு எதிர்க்கட்சி தலைவரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எதிர்வரும் ஆண்டுகளில் அனைத்திலும் நீங்கள் வெற்றி காண விழைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்