திமுக தலைவராக மீண்டும் போட்டியின்றி தேர்வானார் மு.க.ஸ்டாலின்..
திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் விங்க்ஸ் கன்வென்ஷன் செண்டரில் திமுக பொதுக்குழு கூட்டம், இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திமுகவின் 15-வது பொதுத் தேர்தலை ஆற்காடு வீராசாமி ஆணையாளராக இருந்து நடத்துகிறார். தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600 பேர், கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 4 ஆயிரம் பேர் இதில் பங்கேற்றுள்ளனர்.
இவர்கள் முன்னிலையில் திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் , 4 தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் பொது செயலாளர் பதவிக்கு அமைச்சர் துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் மட்டுமே போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்ததால் அவர்கள் மீண்டும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். இதையடுத்து திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.