"மறைமுக தேர்தலும் அமைதியா நடக்கனும்" - உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி தேர்தலில் கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரலிங்கம் உள்பட 15 அதிமுக கவுன்சிலர்கள், மார்ச் 4ஆம் தேதி நடக்கவுள்ள மறைமுகத் தேர்தலை தள்ளிவைக்க கூடாது என மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், தங்களை ஆளுங்கட்சியினர் மிரட்டுவதாக புகார் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”தேர்தல் நடவடிக்கைகள் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்படும். உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். எனவே, மறைமுகத் தேர்தலை தள்ளிவைக்கும் திட்டமில்லை” என்றார். தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ”மனுதாரருக்கு எதிராக, நகராட்சியில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரை கடத்தியதாக புகார் உள்ளது. அதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை எந்த கைது நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ”தேர்தல் தள்ளிவைக்கப்படலாம் என்று மனுதாரர்கள் அச்சம் கொள்ள எந்தக் காரணமும் இல்லை. திட்டமிட்டபடி தேர்தல் நடத்தலாம். மறைமுக தேர்தலிலும் சிசிடிவி நடைமுறை தொடர வேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர். மேலும் மறைமுகத் தேர்தலை அமைதியாக நடத்த அறிவுறுத்திய நீதிபதிகள், ”ஏதேனும் சட்டவிரோத செயல்கள் நடந்தால் மனுதாரர்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையை அணுகலாம்” எனவும் உத்தரவிட்டனர்.