தமிழகம் முழுவதும் பறந்த அதிரடி உத்தரவு.. - டாஸ்மாக்கில் இனி வாடிக்கையாளர்களுக்கு ரசீது கட்டாயம்..

 
Tasmac

டாஸ்மாக் கடைகளில் இனி வாடிக்கையாளர்களுக்கு ரசீது வழங்க வேண்டும் என்றும், விலைப்பட்டியல் வாடிக்கையாளர்களுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ‘டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர் இல.சுப்பிரமணியன்,  அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.  பல்வேறு முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர், அதனை மீறு கடை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். 

மேலும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “‘டாஸ்மாக்’ மதுபான சில்லரை விற்பனை கடைகள், உயர் ரக (எலைட்) மதுபான சில்லரை விற்பனை கடைகளில் ‘பில்’ புத்தகம், தினசரி சிட்டா, சரக்கு இருப்பு மற்றும் விற்பனை, வருகை, ஆய்வு உள்பட 21 பதிவேடுகளை முறையாக தினந்தோறும் பராமரிக்க வேண்டும். ஆய்வின்போது இந்த ஆவணங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

tasmac

சமீபத்தில் ‘எலைட்’ மதுபான கடைகளை ஆய்வு செய்தபோது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டது. எனவே கிடங்குகளில் இருந்து ‘எலைட்’ கடைகளுக்கு ‘புல்’ (750 மி.லி.) அல்லது ஒரு லிட்டர் (1,000 மி.லி.) அளவிலான உயர்ரக மதுபானங்கள் மட்டுமே விற்பனைக்கு அனுப்பப்பட வேண்டும்.

விற்பனையாகும் மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளுக்கு கட்டாயம் வாடிக்கையாளர்களுக்கு ரசீது வழங்க வேண்டும். அதில் மதுபானத்தின் பெயர், அளவு, அரசு நிர்ணயித்த விலை மற்றும் கடை ஊழியர்களின் கையொப்பம் இருக்க வேண்டும். மதுபானங்கள் விலை பட்டியல் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு தெரியும்படி இருப்பு பட்டியலுடன் கட்டாயம் வைக்கப்பட வேண்டும்.
 Tasmac
உற்பத்தியாளர்களிடம் இருந்து மதுபான கிடங்கில் இருந்து பெறப்பட்ட நாளில் இருந்து 90 நாட்களுக்குள் விற்பனை செய்திட வேண்டும். 90 நாட்களுக்கு மேற்பட்ட மதுபானங்கள் இருப்பில் இருக்க கூடாது. மதுபானங்கள் விற்பனையை அதிகளவில் ‘பி.ஓ.எஸ்’ (pos) எந்திரம் மூலம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அறிவுரைகளை மீறும் கடை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையை சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாவட்ட மேலாளர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எறு குறிப்பிடப்பட்டுள்ளது.