துாத்துக்குடி மாவட்டத்தில் 'சிப்பெட்' கல்வி மையம் அமைக்கப்படும் - மன்சுக் மாண்டவியா

 
mansuk mandaviya

துாத்துக்குடி மாவட்டத்தில் 'சிப்பெட்' கல்வி மையம் விரைவில் தொடங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

சென்னை கிண்டி தொழிற்பேட்டையில், 'சிப்பெட்' என்ற, மத்திய பிளாஸ்டிக்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், 1968ல் தொடங்கப்பட்டது. பிளாஸ்டிக்ஸ் தொடர்பான இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் மற்றும் டிப்ளமா படிப்புகள் இங்கு கற்று கொடுக்கப்படுகின்றன.இந்நிலையில், கிண்டியில் உள்ள சிப்பெட் வளாகத்தில், 59 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆறு அடுக்கு கொண்ட தொழில்நுட்ப மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். 

cipet

விழாவில் பேசிய மன்சுக் மாண்டவியா, பிளாஸ்டிக் துறை வளர்ச்சியில், சிப்பெட்டின் பங்களிப்பு மிக முக்கியமானது எனவும், தமிழகம் வாகன உற்பத்தியில் சிறந்து விளங்குவதாகவும் கூறினார். அத்துறைக்கு தேவையான பிளாஸ்டிக் சார்ந்த உதிரி பாகங்கள், மருத்துவத் துறைக்கு தேவையான பிளாஸ்டிக் கருவிகள், வேளாண் துறைக்கு தேவையான பொருட்கள் அனைத்திற்கும்,சிப்பெட்டின் பங்களிப்பு இன்றியமையாதது என கூறினார்.  நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, பெட்ரொ கெமிக்கல் துறை முக்கிய பங்காற்றி வருகிறது எனவும், இத்துறையின் வளர்ச்சி  நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது எனவும் கூறினார்.  இந்த தொழில்நுட்ப மையத்தால் திறன் பெற்ற தொழிலாளர்கள், இத்துறையில் அதிகம் கிடைப்பதால், இந்த துறையில் அதிக வேலை வாய்ப்பும் உருவாகும் என கூறிய அவர்,  தென் மாநிலங்களில் அதிக சிப்பெட் மையங்களை உருவாக்கும் வகையில் துாத்துக்குடி மாவட்டத்தில் புதிய சிப்பெட் மையம் அமைக்கப்படும் என கூறினார்.