நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

 
anbil magesh

நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். 

சென்னையில் பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் பொன்விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், சேகர்பாபு ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: எங்கள் இயக்கத்தின் நிறுவனர் அண்ணா ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று சொன்னார்.  மனஅழுத்தம் இல்லாத அமைதியான பூமியை வடிவமைக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு தியானம் மிக அவசியம். நாங்களும் கல்வி நிலையங்களில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவ வேண்டும் என்பதற்கு தகுந்தாற்போல் பாடத்திட்டங்களை வடிவமைத்து கொண்டு இருக்கிறோம். அடக்கப்பட்ட மனம்தான் நமக்கு நண்பனாக இருப்பான். அடக்கப்படாத மனம் என்றைக்கும் நமக்கு விரோதிதான் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். எங்களுடைய திராவிட மாடல் புத்தகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வது இதுதான். நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு என்று சொல்லியிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்