ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுகிறது - அமைச்சர் ஐ.பெரியசாமி
தமிழக ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்பட்டு வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது. பகுதி நேர கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டு எம்.எல்.ஏ., நிதி மூலம் கட்டடங்கள் கட்டப்படுகிறது.
ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கூட்டுறவு துறையில் பல புதிய மாற்றங்கள் வரவுள்ளது. ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கிராமங்களில் 150 கார்டுகளுக்கு தனியாக பகுதிநேர கடை அமைக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக இருந்த போதை பொருள் விற்பனை புழக்கத்தை ஒரே ஆண்டில் தி.மு.க., அரசு தடுத்து நிறுத்தியுள்ளது.போதை பொருள் விற்பனை செய்தவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதுவரை 1500 வழக்குகள் போடப்பட்டுள்ளது. போதை பழக்கத்தை தடுப்பதற்கு பள்ளி, கல்லூரிகளில் உறுதிமொழி ஏற்க வைக்க உள்ளோம். இவ்வாறு கூறினார்.