கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம் - அமைச்சர் தகவல்

 
mano

கடலில் மீன்பிடிக்க செல்லும் போது காணாமல் போகும் மீன்வர்களை கண்டுபிடிக்க இஸ்ரோவுடன் இணைந்து உயர் தொழில்நுட்பம் கொண்ட கருவியை தயாரிக்க முயற்சி எடுத்து வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சுங்கான்கடையில் தமிழக தகவல் தொழில்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் காணாமல் போகும்போது அவர்களை தேடி கண்டுபிடிப்பதற்காக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையும், மீன்வளத் துறையும், இஸ்ரோ அமைப்பும் சேர்ந்து ஒரு உயர் தொழில்நுட்பம் கொண்ட அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்காக முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் வேலை இல்லாத இளைஞர்கள் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்  கூறினார்.