தண்ணீரில் கழிவுகளை கலப்பது தாய்ப்பாலில் விஷத்தை கலப்பதற்கு சமம் - அமைச்சர் மெய்யநாதன்

 
Meyyanathan

தண்ணீரில் கழிவுகளை கலப்பது தாய்ப்பாலில் விஷத்தை கலப்பதற்கு சமம் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 

சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள HECS கார்ப்பரேட் அலுவலகத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வி. மெய்யநாதன் கலந்து கொண்டு கட்டிடங்களை காணொளி மூலம் திறந்து வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், தமிழகத்தில் 10 இடங்களில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டத்தில் உள்ள ஆலைகளில் இருந்து சாயக்கழிவுகள் ஆற்றில் கலப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறது என்றும், தண்ணீரில் கழிவுகளை கலப்பது தாய்ப்பாலில் விஷத்தை கலப்பதற்கு சமம். சாயப்பட்டறை கழிவுநீரை கலந்தால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

Meyyanathan

தற்போது முன்பை விட 20% பிளாஸ்டிக் பயன்படுத்துவதை மக்கள் தவிர்த்து உள்ளனர்.  வெளிமாநிலங்களில் இருந்து தான் தமிழகத்திற்கு பிளாஸ்டிக் வருகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும். தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக 174 க்கும் மேற்பட்ட கம்பெனிகளை மூடியுள்ளதாகவும், இனி அது போன்ற நிறுவனங்கள் இருந்தால் சொல்லுங்கள் அரசு நடவடிக்கை எடுக்கும். பிளாஸ்டிக்கை ஒழிக்க, முதல்வர்   அறிமுகப்படுத்திய மஞ்சப்பை திட்டம் விரிவுபடுத்தப்படும். அத்துடன் பயோ பிளாஸ்டிக் குறைந்த நாட்களில் 16 நாட்களில் மக்குவதாக விஞ்ஞானி ஒருவர் கண்டறிந்துள்ள செய்தியை காண முடிந்ததாகவும், இது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்.‌ அதற்கான தயாரிப்பு செலவு அதிகம் என்பதால் அதனை முழுவதுமாக செயல்படுத்துவதிலும் சிக்கல் இருப்பதாகவும், அத்துடன் விவசாயம் சார்ந்த பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் மக்ககூடியது எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

வரும் ஜூலை மாதத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்பட உள்ளதால் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், 200 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் போட்டியாளர்கள் மாமல்லபுரத்தில் நடக்கிறது என்றும், அதிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சிறப்பாக விளையாடி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதாக, அவருக்கு தனது வாழ்த்துக்களையும் அமைச்சர் மெய்யநாதன் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கிராமப்புற மாணவர்கள் சிறப்பாக விளையாட மாவட்ட அளவில் கல்வித்துறை மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு  போட்டிகளை காண பள்ளி கல்வி துறை அமைச்சரும் தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறினார்.