கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு நடப்பது போல தமிழகத்தில் நடைபெறாமல் இருப்பதற்கு காரணம் திமுக அரசு - அமைச்சர் பொன்முடி

 
ponmudi

கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு நடப்பது போல தமிழகத்தில் நடைபெறாமல் இருப்பதற்கு காரணம் திமுக அரசுதான் என உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

சென்னை தேனாப்பேட்டையில் உள்ள நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரிக்கு A++ என்ற தரச்சான்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கல்லூரி முதல்வரிடம் வழங்கினார். இந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக மேடையில் பேசிய, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: கல்வி, பெண்களின் முன்னேற்றத்துக்காக உழைப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 1955-ல் ஜவஹர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்ட கல்லூரி நீதிபதி பஷீர் அஹமது சயீது மகளிர் கல்லூரி. இது 4-வது முறையாக NAAC அமைப்பால் A++ தரவரிசையைப் பெற்றுள்ளது. முந்தைய காலத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை, வலியுறுத்தி பெற்றுத்தந்தது திராவிட இயக்கம். இது தான் திராவிட மாடல் அரசு  

தொடர்ந்து பேசிய அவர், இஸ்லாமியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கியது திமுக அரசு, தொழிற்படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு, மாணவியருக்கு மாதம் ரூ.1,000 உயர்கல்வி உதவித்தொகை வழங்கியது திமுக அரசு தான் என்றார். கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு நடப்பது போல தமிழகத்தில் நடைபெறாமல் இருப்பதற்கு காரணம் திமுக அரசுதான் என கூறினார். மேலும், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய தொடர்ந்து அனுமதி வழங்கியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, நீதிபதி பஷீர் அஹமது சயீது மகளிர் கல்லூரி நிர்வாகம் நன்றி தெரிவித்தார்.