இலங்கைக்கு அனுப்பப்படும் அரிசி குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி

 
Minister sakkarabani

இலங்கைக்கு கொள்முதல் செய்து அனுப்பப்படும் அரிசி குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அமைச்சர் சக்கரபாணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாகக் கடுமையான துன்பத்திலிருக்கும் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முடிவெடுத்து ஒன்றிய அரசின் அனுமதியைக் கோரியிருந்தார்கள். அனுமதி கிடைத்தவுடன் 40 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட பொருள்களை அனுப்பிடும் நடவடிக்கையைத் துரிதப்படுத்தினார்கள். அதன்படி ஒப்பந்தப்புள்ளிகள் கோரி இறுதிப்படுத்திட தாமதமாகும் நிலையில் உடனடியாக நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்காக வெளிப்படைத்தன்மையுடன் அரிசி ஆலை அதிபர்களின் சங்கங்களை அழைத்துப் பேசி, குறுகியகாலத்தில் உற்பத்தி செய்ய முடிந்த 51 ஆலைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விநியோக ஆணைகள் வழங்கப்படுகின்றன. இலங்கை அரசு ஏற்கனவே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து உள்ள அரிசிக்கு இணையான, ஆந்திரா பொன்னி, ஏடிட்டி - 45. கோ- 51 போன்ற உயர்ரக அரிசி இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டு. 10 கிலோ பைகளில் அனுப்பப்பட உள்ளது. இவற்றை சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கு அனுப்புவதற்கான போக்குவரத்துச் செலவு,பை உட்பட கிலோ ஒன்றிற்கு ரூ.33.50 என்ற குறைந்த விலையில் கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது.

Minister sakkarabani

இந்நிலையில் சில விசமிகள் வழக்கமாக விசத்தைக் கக்கும் விதமாக இந்திய உணவுக் கழகத்திடமிருந்து கிலோ ஒன்றிற்கு 20 ரூபாய்க்கு வாங்காமல் அதிகமாகக் கொடுத்து வாங்கிவிட்டது போல் சமூக ஊடகங்களில் எழுதுகின்றனர். இது தவறான பெ பிரச்சாரமாகும். ஒன்றிய அரசின் உணவு மானியத்தால் விலை குறைக்கப்பட்டு, 20 ரூபாய் விலையில் இந்திய உணவுக் கழகம் வழங்கக்கூடிய கூடிய அரிசியானது, நமது நாட்டில் பொது விநியோகத் திட்டத்தில் மாநில அரசுகள் விநியோகிப்பதற்கும் மாநில அரசின் திட்டங்களுக்கும் மானிய விலையில் வழங்கப்படும் அரிசி ஆகும். இதனை மாநில அரசுகள் வெளிநாடுகளுக்கு அனுப்ப இயலாது. இதனால்தான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக அரிசி கொள்முதல் செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படுகிறது. எனவே இந்த இந்திய உணவுக் கழக அரிசியை, இலங்கைக்கு அனுப்புவதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் கொள்முதல் ஆணை வழங்கியுள்ள உயர்ரக அரிசியோடு ஒப்பிடுவது முற்றிலும் தவறானது.  இந்த உண்மைகள் முழுமையாகத் தெரிந்திருந்தும் அவதூறு செய்ய வேண்டும் என்பதற்காகவே சிலர் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அவதூறு பரப்புவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.