பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கருத்து கேட்பு கூட்டம் கபட நாடகமா? - அமைச்சர் பதிலடி
மின் கட்டண உயர்வு குறித்த கருத்து கேட்பு கூட்டம், கபட நாடகம் என்று கூறும் அண்ணாமலை, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுவதும் கபட நாடகமா ? என்பதை விளக்க வேண்டும் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.
கோவை ஈச்சனாரியில் நடைபெறவுள்ள அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். இதனையொட்டி விழாவிற்கான ஏற்பாடுகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: மத்திய அரசுக்கு மின் கட்டண நிலுவை தொகை ரூ.70 கோடி செலுத்தப்பட்டு உள்ளது. மாநில அரசு கொடுக்க வேண்டிய பில் தொகை தாமதம் ஆகும்போது மத்திய அரசு தடை ஏற்படுத்துகிறது. ஆனால் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய தொகை பலவற்றில் நிலுவை உள்ளது. அவற்றை எல்லாம் உரிய காலத்தில் கொடுப்பதில்லை. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தனிப்பட்ட அமைப்பு. அதன் அதிகாரங்களை பறிக்க கூடிய செயலில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. இதற்காகத்தான் பாராளுமன்றத்தில் மின்சார திருத்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், மின் கட்டண உயர்வு குறித்த கருத்து கேட்பு கூட்டம், கபட நாடகம் என்று கூறும் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுவதும் கபட நாடகமா என்பதை விளக்க வேண்டும். கர்நாடகா, குஜராத் மாநிலங்களின் மின் கட்டணத்தையும், இங்குள்ள மின் கட்டணத்தையும் பார்த்து விட்டு அவர் பேச வேண்டும். இவை குறித்து பலமுறை கேட்டும் அண்ணாமலை பதில் சொல்லவில்லை. இவ்வாறு கூறினார்.