புதிய மின்கட்டண நடைமுறை எப்போது அமலுக்கு வரும்? - அமைச்சர் பதில்

 
senthil balaji

ஒழுங்குமுறை ஆணையம் எப்போது நடைமுறைப்படுத்த சொல்கிறதோ, அப்போதில் இருந்து புதிய கட்டணம் நடைமுறைக்கு வரும் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். 

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மின்சார கட்டண உயர்வு தொடர்பாக 'டாஸ்மா' அமைப்பு சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது. தவறான தகவலை தொடர்ந்து தடை வாங்கியிருந்தார்கள். தற்போது மேல்முறையீடு செய்து, இடைக்கால தடையை மின்வாரியம் வாங்கிவிட்டது. இனிமேல் மின்கட்டண உயர்வு என்பது எந்த தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்பதை ஒழுங்குமுறை ஆணையம் தான் மின்வாரியத்துக்கு உத்தரவு பிறப்பிக்கும். அந்த உத்தரவுக்காக மின்வாரியம் காத்திருக்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பொறுத்தவரையில், நிலைக் கட்டணங்கள் அதிகமாக இருப்பதாக கருத்துகள் தெரிவித்தனர். அதனை கருத்தில்கொண்டு, அதனை மட்டும் குறைத்து, பரிசீலித்து இருக்கிறோம். வேறு எதில் குறைக்கவேண்டும் என்பது பற்றியும் அதில் தெரிவித்து ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பியிருக்கிறோம். ஒழுங்குமுறை ஆணையம் எப்போது நடைமுறைப்படுத்த சொல்கிறதோ, அப்போதில் இருந்து புதிய கட்டணம் நடைமுறைக்கு வரும்
 
மின்வாரியத்தில் இருக்கும் காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை கேட்டு இருக்கிறோம். அது வந்தவுடன் அரசு அறிவிப்பின்படி எந்தெந்த பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. நிரப்புமோ, அதன் மூலம் நிரப்பப்படும். மற்ற இடங்களை வாரியம் நிரப்பும். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.