முல்லைப் பெரியாறு அணை : “ரூல் கர்வ்' விதியினை ரத்து செய்க.. - ஓபிஎஸ் வலியுறுத்தல்..

 
ஓபிஎஸ்

உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கவும், “ரூல் கர்வ்' விதியினை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்றம் தனது 27-02-2006 நாளிட்ட தீர்ப்பில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றும், அணைப் பலப்படுத்தும் பணிகளுக்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பை நல்கும் என்றும், அணையை பலப்படுத்தும் பணிகள் முடிந்தவுடன், அணையின் நீர் மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதனை தனது 07-05-2014 நாளைய தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.

 முல்லை பெரியாறு அணை

 அதிமுக  ஆட்சிக் காலத்தில் பலமுறை முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்த் தேக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஓராண்டு கால தி.மு.க. ஆட்சியில் இந்த முறை பின்பற்றப்படவில்லை.  தற்போது, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டியது. உடனே,  கேரள முதலமைச்சர்  , அணைக்கு அதிகப்படியான நீர் வரத்து உள்ளதால்,  அணையின் நீர் மட்டத்தை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும், நீர் வரத்தை விட அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார்.  இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும், தமிழக விவசாயிகளைக் கலந்து ஆலோசிக்காமல், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 534 கன அடி நீரை கேரளப் பகுதிக்கு திறந்து விட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
  பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணையில் 142 வரை நீரைத் தேக்காததற்கு 'ரூல் கர்வ்' என்ற விதி தான் காரணம் என்றும்,  இதனால்  இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு தண்ணீர் சென்றடையாத சூழ்நிலை உள்ளதாகவும் கூறுகின்றனர்.  திமுக ஆட்சியில் 'ரூல் கர்வ்' பிரச்சனை இல்லை என்றே நான் கருதுகிறேன்.  இந்த ‘ரூல் கர்வ்' விதிக்கு தமிழ்நாடு அரசு எப்போது ஒப்புதல் கொடுத்தது? இதற்கான அனுமதி யாரால் அளிக்கப்பட்டது? இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்து கேட்கப்பட்டதா? தமிழ்நாடு அரசினுடைய ஒப்புதல் இல்லாமலேயே மத்திய நீர் வள ஆணையம் இந்த ‘ரூல் கர்வ்' விதியை வகுத்துள்ளதா? என்பதையெல்லாம் தி.மு.க. அரசு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர்  தமிழக விவசாயிகளின் நலனைப் பாதிக்கக்கூடிய ‘ரூல் கர்வ்' குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று  அதிமுக சார்பில்  வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதோடு, இதனை எதிர்த்து  மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.