முரசொலி மாறன் 89வது பிறந்தநாள் : அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை..
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 89வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு, அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
கலைஞர் கருணாநிதியின் மனசாட்சி என இன்றளவும் திமுகவினரால் நினைவுகூரப்பட்டு வாஞ்சையாக அழைக்கப்படுபவர் முரசொலி மாறன். 1934ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், திருக்குவளையில் பிறந்தவர் முறசொலி மாறன்.. பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ., பட்டம் பெற்ற இவர், சிறு வயது முதலே கருணாநிதியின் புத்தக அலமாரியிலிருந்து புத்தகங்களை எடுத்து படிப்பது, அவருடன் உரையாடல் - விவாதங்கள் செய்வது என , கலைஞரின் கொள்கைகளையே கேட்டு பின்பற்றி வளர்ந்துள்ளார். தியாகராஜ சுந்தரம் என இயற்பெயர் கொண்ட இவர், பின்னாளில் கருணாநிதி ‘முரசொலி’ பத்திரிகை நடத்தி வந்தபோது அதில் மேலாளராகவும், எழுத்தாளராகவும் மாறன் என்ற புனை பெயருடன் தனது எழுத்துப்பணியை தொடங்கினார். அதன்பிறகு முரசொலி மாறன் என அழைக்கப்பட்டார்.
அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் மிகச் சிறந்த திராவிட இயக்க ஆய்வாளராகவும் அறியப்பட்ட மாறன், கலைஞரைப்போலவே பத்திரிக்கைத்துறை, எழுத்துத்துறை, ஊடகத்துறை, திரைத்துறைகளில் ஜாம்பவானாக விளங்கியவர். இவரது மாநில சுயாட்சி குறித்த நூல் இன்றளவும் திராவிட இயக்கத்தின் சிறந்த ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்த முரசொலி மாறன் இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவராக விளங்குவார் என்றால் அது மிகையல்ல. திமுகவை பொறுத்தவரை கலைஞரின் மனசாட்சி, நிழல், கருவிழி என அனைத்தும் முறசொலி மாறனுக்கு பொறுந்தும்.
அப்படி கலைஞரின் மறு உருவமாகவே விளங்கினார். திமுகவின் மூளையாக செயல்பட்ட முரசொலி மாறனின் 89வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் சிலைக்கு திமுக பொருளாளரும் , அமைச்சருமான துரைமுருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, சேகர்பாபு, எ.வ.வேலு, சாமிநாதன் ஆகியோரும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன் எம்.பி., உள்ளிட்டோரும் முரசொலி மாறன் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.