பக்ரீத் பண்டிகை - நாகூர் கடற்கரையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

 
nagoor

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் கடற்கரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். 

பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்தியாவில் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில், சவுதி அரேபியாவில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு,  நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பை சேர்ந்த இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளாக பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெறாமல் இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். தியாக திருநாளான பக்ரீத் பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் ஆடு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை பலி கொடுத்து, அதன் இறைச்சியை மூன்றில் ஒரு பங்காகப் பிரித்து ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்வது குறிப்பிடதக்கது.