வருகிற 30ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் - முத்தரசன் அறிவிப்பு..

 
“கிராமசபை கூட்டத்தை ரத்து செய்தது கண்டிக்கத்தக்கது” – முத்தரசன் பேட்டி

மின்சார சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து  மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக வருகிற 30 ஆம் தேதி மறியல் போராட்டம்  நடத்தப்படும் என  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் மாநில செயலாளர் ஆர். முத்தரசன் ,  வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு நம் இந்தியா.  ஆனால் மத்தியில் மதவெறி, மத மோதலை உருவாக்கி தங்களை பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் பா.ஜனதா அரசு ஈடுபடுவதாக தெரிவித்தார். மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டு பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளதாகவும்,  எங்கு பார்த்தாலும் ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்படுவதாகவும் கூறினார்.  அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்தை ஆர்.எஸ்.எஸ். ஆக மாற்றும் முயற்சியை மத்திய அரசு மேற்கொள்வதாக குறிப்பிட்ட அவர், வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் மூலம் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்  என்றார்.

மின்சாரம்

இதை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடர வேண்டும் எனவும்,   நாட்டில் அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொருட்கள், கட்டுமான பொருட்கள், மருந்து, மாத்திரைகளின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதாக கூறினார். மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர்,   இது மிகக்கடுமையான கண்டனத்துக்குரியது என்றார்.  இந்த சட்ட திருத்தத்தால் மின்கட்டணம் உயரும் அபாயம் உள்ளதாகவும், அத்துடன்  தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

போராட்டம் அறிவிப்பு

இதுபோன்ற மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து வருகிற 30-ந் தேதி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு முன் மாபெரும் மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்திருப்பதாகக் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், பீகார் அரசியலில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பதாகவும்,  இது  தொடரும். பா.ஜனதாவை விட்டு மாநில கட்சிகள் வெளியேறுவார்கள் என்றும்  கூறினர்.   மேலும், அ.தி.மு.க.வை பலவீனப்படுத்துவதும், பலப்படுத்துவதும் பாஜகவின் கையில் தான்  இருப்பதாகவும், அ.தி.மு.க. சுயமாக செயல்படாத காரணத்தால் பா.ஜ.க. அதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்வதாகவும் முத்தரசன் கூறினார்.