ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு - முத்தரசன் வரவேற்பு...
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், “ஆர்எஸ்எஸ் இயக்கம் மற்றும் பாஜக போன்ற அமைப்புகள் அமைதி பூங்காவாக விளங்கி வருகிற தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க கூடிய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். தேசா பிதா என்று போற்றப்படுகிற மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற வழக்கில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்த கோட்சேவுக்கு தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. அப்படி காந்தியை கொன்ற இயக்கம், காந்தியுடைய பிறந்த நாளில், பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாளில் ஊர்வலம் நடத்த தேர்ந்தெடுத்து இருப்பதும் அரசியல் உள்நோக்கம் கொண்டது.
அந்த அமைப்பு 50 இடங்களில் அணிவகுப்பை நடத்தி அதன் மூலம் ஒரு பதற்றத்தையும், கலகத்தையும் உருவாக்கி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது என்று சொல்ல வேண்டும் உள்நோக்கத்தோடு செயல்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலோடு , தமிழக சட்டமன்ற தேர்தலில் நடைபெறும் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சொல்கிறார். அப்படி எனில் அதில் உள்நோக்கம் இருப்பது தெரிகிறது. தீய நோக்கத்தோடு செய்யப்படுகின்ற இந்த முயற்சிக்கு, சட்டம் ஒழுங்கு காக்க காவல்துறை அனுமதி மறுத்திருப்பது வரவேற்கக் கூடிய ஒன்று. நாட்டில் பிஎப்ஐ அமைப்பை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை செய்தது போன்று , ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தடை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் எங்கேயும் அவர்கள் அணிவகுப்பு நடத்த அனுமதிக்க கூடாது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.” என்றார்.
அதேநேரம் ஆர்எஸ்எஸ் நடத்துகிற அணிவகுப்பும், விடுதலை சிறுத்தைகள் அழைப்பு விடுத்த மனித சங்கிலியையும் ஒப்பிட்டு பார்க்க கூடாது. சமூக நல்லிணக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்கிற சமூக அக்கறையோடு தான் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனித சங்கிலிக்கு அனுமதி கோரியது. அதற்கு திராவிடர் கழகம், மதிமுக, காங்கிரஸ் போன்ற அனைத்து இயக்கங்களும் அதற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறியிருந்தனர். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஆகையால் மனித சங்கிலிக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.