மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3.70 கோடி சொத்துகள் மீட்பு

 
mylapore koil

             
சென்னை மயிலாப்பூர்  கபாலீசுவரர்  கோயிலுக்கு சொந்தமான 3 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. 

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான 6 கட்டிடங்கள் மற்றும் மனைகளில் குடியிருப்பவர்கள் மற்றும் வணிகம் செய்பவர்களுக்கு பலமுறை அறிவிப்புகள் அனுப்பப்பட்டு நியாய வாடகை வசூல் செய்யப்பட்டு வருகிறது. நியாய வாடகை செலுத்தாதவர்களின் வாடகை உரிமம் ரத்து செய்யப்பட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான ஆறு கட்டிடங்களுக்கு நியாய வாடகை நிர்ணயக் குழுவின் மூலம் நிர்ணயம் செய்யப்பட்ட நியாய வாடகையை செலுத்த பலமுறை அறிவிப்புகள் அனுப்பபட்டும், அறிவிப்புகளை பெற்றுக் கொண்ட கட்டிட வாடகைதாரர்கள் நியாய வாடகை மற்றும் நிலுவை வாடகைத் தொகைகளை செலுத்த முன்வரவில்லை.எனவே வாடகைதாரர்களின் வாடகை உரிமம் ரத்து செய்யப்பட்டது. 

indhu samayam

அதன் பின்னர் ஆறு கட்டிடங்களில் உள்ள வாடகைதாரர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி, அவர்களை வெளியேற்றிட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது,  அதன் அடிப்படையில் கடந்த மாதம் 29 ம் தேதி அன்று திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களிலிருந்து 4 கடைகள் சீலிடப்பட்டது, மேலும் நேற்று  இரண்டு கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புதாரர்களை வெளியேற்றி சீலிடப்பட்டு சொத்துகளை திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. சுவாதீனம் பெறப்பட்ட சொத்துகளின் மதிப்பு சுமார் ரூபாய் 3 கோடியே 70 லட்சம் ஆகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.