என்.ஐ.ஏ. சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள் - அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

 
nia

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திய சில இடங்களில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கோயம்புத்தூரில்  கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் 23ஆம் தேதி அன்று கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.  இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் முபின் என்பவர் உயிரிழந்தார்.   விசாரணையில் அவர் பெரும் சதி திட்டத்துடன் செயல்பட்டதும்,  ஐஎஸ் பயங்கரவாதி என்பதும் கண்டறியப்பட்டது.  இதன் பின்னர்  முபினுடன் தொடர்புடைய ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதை அடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை ஏற்கனவே விசாரணை நடத்தி இருக்கும் நிலையில் இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை,  திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, நாகப்பட்டினம்  ஆகிய 5 மாவட்டங்களில்  45 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

NIA Covai

கோவையில் கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், புல்லுக்காடு, ரத்தின புரி, ஜி.எம்.நகர் உள்பட 33 இடங்களில் சோதனை நடந்தது. பலியான முபின் மற்றும் கைதான 6 பேரின் உறவினர்கள், நண்பர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்களின் வீடுகள் என 33 இடங்களில் அதிகாலை முதலே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னையில் புதுப்பேட்டை, மண்ணடி, பெரம்பூர், ஜமாலியா உள்பட 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நெல்லையில் 2 இடங்களிலும், திருப்பூரில் ஒரு இடத்திலும், மதுரையில் 2 இடத்திலும், தூத்துக்குடி காயல்பட்டினத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடந்து வருகிறது. 

இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திய சில இடங்களில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ள தேசிய புலனாய்வு அமைப்பினர் அது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.