அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ‘நம்ம ஸ்கூல்’ திட்டம்.. - முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்...

 
stalin

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், "நம்ம ஸ்கூல்" என்னும் புதிய திட்டத்தை  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், தன்னார்வ அமைப்புகளிடம் நிதி உதவி பெற்று அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் திட்டம் என்பதுதான் இந்த நம்ம ஸ்கூல் திட்டமாகும்.  இந்தத் திட்டத்தை நாளை (டிச 19) தொடங்கிவைக்க இருப்பதாக  நேற்று அறிவித்தார்.  இத்திட்டம் மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளிலும்,  தொழிலதிபர்களாகவும் உள்ள முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட நிறுவனங்கள் (என்.ஜி.ஓ) ,  தங்களது சமூகப் பொறுப்புணர்வு நிதி (சி.எஸ்.ஆர்) மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்துக்கொள்ளலாம்.  

school

இவர்கள்  பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ஏதுவாக இத்திட்டம் தொடங்கப்படுகிறது.  இந்த நம்ம ஸ்கூல் திட்டத்தினையும்,  இதற்கான இணையதளத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அறிமுகம் செய்கிறார். இந்த இணையதளம் மூலம் இத்திட்டத்தில் பங்கெடுக்க விரும்புகிறவர்கள், எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி வழங்கலாம் என்றும்,  மேலும், பணிகள் முறையாக நிதி மூலம் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் நிதி வழங்கியவர்கள் இணையதளம் வாயிலாக அறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.