எனக்கு எதுவுமே தெரியாது - ஓ.பி.எஸ்ஸை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எதுவும் தனக்கு தெரியாது என ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதை அடுத்து அவரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாம் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தில் நேற்று ஆஜரான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 2016 செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரம் எனக்கு தெரியாது என கூறினார். ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது என்பதை தவிர அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது எனவும் கூறினார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைய கோப்பில் துணை முதலமைச்சர் என்ற அடிப்படையில் நானும் கையெழுத்திட்டுள்ளேன் எனவும், ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது ? எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரம் தனக்கு தெரியாது எனவும் வாக்குமூலம் அளித்தார்.
இந்நிலையில் பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது, தெரியாது என பதிலளித்த ஓ.பன்னீர்செல்வத்தை நெட்டிசன்கள் மீம்ஸ்கள் மூலம் கலாய்த்து வருகின்றனர். தர்மயுத்தம் ஏன் நடத்தினேன் என்பது தெரியாது, மெரினாவில் அம்மா சமாதியில் ஏன் போராடினேன் என்பது தெரியாது, நான் யார், எந்த ஊர் என்பது கூட தெரியாது, உள்ளிட்ட வசனங்களை போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இவ்வளவு ஏன் ஜெயலலிதாவை யார் என்று தெரியாது என ஓ.பன்னீர்செல்வம் கூறுவது போல் மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளியுள்ளனர்.