நித்தியானந்தா - ரஞ்சிதா : நேரடி விசாரணை
பெங்களூருவில் பிடதி ஆசிரமத்தை நடத்தி வந்த நித்தியானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ தனியார் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த வீடியோ நவீன தொழில்நுட்பம் மூலம் சித்தரிக்கப்பட்ட வீடியோ காட்சி என்றும் இதைக் காட்டி பணம் கேட்டு மிரட்டுவதாகவும் நித்தியானந்தா பிடதி நிர்வாகி சென்னை போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஐயப்பன் , லெனின், ஆர்த்தி ராவ் உள்பட பலர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் மறு விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும், ஆர்த்திராவ், பரத்வாஜ் இடையே நடந்த இமெயில் உரையாடலையும் கர்நாடக மாநில அமர்வு நீதிமன்றத்தில் இருக்கும் மார்பின் வீடியோ கேசட்டை குறித்து மீண்டும் விசாரணை நடத்தக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் நடிகை ரஞ்சிதா.
இந்த வழக்கு நேற்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ரஞ்சிதா தரப்பில் இந்த வழக்கை நேரடி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. நேரடி விசாரணைக்கு அனுமதி அளித்த நீதிபதி, அந்த நேரடி விசாரணையை பிப்ரவரி 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.