தொண்டர்கள் எங்கள் பக்கம்...குண்டர்கள் ஈபிஎஸ் பக்கம் - ஓ.பன்னீர்செல்வம் அதிரடி

 
ops

அதிமுக தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கமும், குண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கமும் உள்ளனர் என்பது மக்களுக்கு நன்கு தெரியும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

அதிமுக தற்போது இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இரு அணிகளும் தங்களுக்கு ஆதரவை திரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே சுற்றுப்பயணமும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான பெரியகுளத்திற்கு சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்தை, திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன், வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சுப்புரத்தினம்,  அன்பழகன், முன்னாள் மாவட்ட பொருளாளர் கோபால் உள்ளிட்ட சுமார் 500 நிர்வாகிகள் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். 

ops

அவர்களை வரவேற்று ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: தமிழக அரசியல் வரலாற்றில் 30 ஆண்டு காலம் ஆட்சியில் அமர்ந்த ஒரே இயக்கம் அ.தி.மு.க., என்பது மிகப்பெரிய சாதனை. ஜூன் 23 நடந்த பொதுக்குழு கூட்டம் எப்படி நடந்தது என அனைவருக்கும் தெரியும். நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படவில்லை. அவை தலைவர் இல்லாத நிலையில் தற்காலிக தலைவராக தமிழ்மகன் உசேனை, ஒருங்கிணைப்பாளரான நான் முன்மொழிய வேண்டும்.இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வழிமொழிய வேண்டும். இது தான் மரபு. நான் பேச ஆரம்பித்த போது கூச்சல், குழப்பம், ரவுடிகள் அட்டூழியம் என அவமரியாதை சூழ்நிலை உருவானது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் 23 தீர்மானங்களையும் ரத்து செய்வதாக கூறியது வரம்பு மீறிய செயல். இவ்வாறு கூறினார்.