மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் என்ன நடக்கும்? - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் ஏற்படும் மாற்றங்கள் குறித்து முன்கூட்டியே சொல்ல இயலாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வருகிற 21ஆம் தேதி அதிமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் 21ம் தேதி காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழனிசாமி அணிக்கு எதிராக போட்டி பொதுக்குழுவை கூட்டி, அதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், 21-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு பின் ஏற்படும் மாற்றங்கள் குறித்து முன்கூட்டியே சொல்ல இயலாது என்று கூறினார்.